ஐங்குறுநூறு 13 - சாமத்திலும் உறங்காத பெண்கள்

ஐங்குறுநூறு 13
பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"பரியுடை நன் மான் பொங்கு உளை யன்ன
வட கரை வேழம் வெண் பூப் பகரும்
தண் துறை ஊரண் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே"

எளிய உரை: விரைவாக ஓடக்கூடிய குதிரையின் மிகுந்து வளர்ந்த பிடரியைப் போல வெண்மையான மலர்கள் பூக்கும் நாணல் செடிகள் கரையில் வளர்ந்திருக்கும் குளிர்ந்த நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய பெண்கள் ஊர் உறங்குகின்ற சாமத்திலும் உறங்காதவரே

விளக்கம்: விரைவாகச் செல்லக்கூடிய குதிரையின் மிகுதியான வெண்  பிடரியைப் போல வெண்மையான மலர்கள் கரையில் உள்ள நாணல் செடிகளில் பூத்திருக்கின்றன. அத்தகைய குளிர்ந்த நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய பெண்கள் ஊர் உறங்கும் சாமத்திலும் உறங்காமல் இருக்கின்றனர் என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் வருந்தி அப்பெண்களில் ஒருவரும் உறங்குவதில்லை என்று பொருள்படுகிறது.

சொற்பொருள்: பரியுடை நன்மான் - விரைவாகச் செல்லும் குதிரை, பொங்கு உளை - மிகுந்து வளர்ந்த  பிடரி , யன்ன - போல, வட கரை - குளிர்ந்த நீர்க்கரை, வேழம் -நாணல், வெண் பூப் பகரும் - வெண்மையான மலர்கள் பூக்கும், தண் துறை ஊரண் - குளிர்ந்த துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவன், பெண்டிர் - பெண்கள், துஞ்சு ஊர் - உறங்கும் ஊர், யாமத்தும் துயில் அறியலரே - நடுநிசியிலும் உறங்காதவரே 

என் பாடல்:
விரைந்து செல்லும் குதிரையின் பிடரி போல
வடகரையில் நாணல் வெண்பூக்கள் பூக்கும்
குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன்
பெண்கள் ஊர் உறங்கும் சாமத்திலும் உறங்காதவரே

14 கருத்துகள்:

  1. சொற்பொருள் மிகவும் அருமை... இது போல் தொடர வேண்டுகிறேன்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.தனபாலன்!
      உங்கள் ஊக்கத்துடனும் வாழ்த்துடனும் கண்டிப்பாகத் தொடர்கிறேன். ஐங்குறுநூறு பாடல்கள் ஐநூற்றையும் இப்படி எளிய உரையுடன் விளக்க எண்ணம் கொண்டுள்ளேன். நன்றி!

      நீக்கு
  2. ஐங்குறுநூறு பாடலும் சரி, அதற்கான உங்கள் பாடலும் சரி, மிக அருமை!

    பதிலளிநீக்கு
  3. பதிமூன்றாவது பாடல் வந்துவிட்டதா? எளிதாக ஐந்நூற்றை எட்டிவிடுவாய் தோழி!!

    அருமையான பாடல் மற்றும் விளக்கம்..தொடர்ந்து எழுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பதிமூன்றுதான் என்று நினைத்தேன்...உன்னுடைய பார்வை ஊக்கம் தருகிறது. நன்றி தியானா! :)

      நீக்கு
  4. உங்கள் பாடலும், விளக்கும் அருமை கிரேஸ்... நிறைய புதிய சொற்கள் கற்று கொள்கிறேன் தங்கள் சங்க இலக்கிய பதிவுகள் மூலம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! மகிழ்ச்சி, சிலவற்றையேனும் பயன்படுத்துங்கள் :)

      நீக்கு
  5. ஊருசனம் தூங்கிருச்சு என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது..
    ஐங்குறுநூறு பாடல் விளக்கம் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதுவும் தலைவனை நினைத்து எங்கும் பாடல்தானே!
      மிக்க நன்றி மகேந்திரன்!

      நீக்கு
  6. தமிழ்மழையில் நனையவைத்த தங்களுக்குத் தலைவணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மழை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கலியபெருமாள்! உங்கள் கருத்திற்கு வணக்கத்துடன் நன்றி!

      நீக்கு
  7. எழுத்துகள் சிறியதாக உள்ளது அக்கா... முடிந்தால் பெரிதுபடுத்தவும்.

    விளக்கம் அருமை, ஆனால் ஊர் பெண்கள் அனைவரும் உறங்காமல் இருக்கிறார்கள் என்பது ஊடல் நிமித்தமாக இருக்கலாமே! ஏனெனில் மருதம் என்பது ஊடலும் ஊடல் நிமித்தத்தைக் கூறுவது தானே!!!

    வார்பிலக்கியம் அருமை... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தின் அளவு பெரிதுபடுத்திவிட்டேன்...தெரியப்படுத்தியதற்கு நன்றி வெற்றிவேல்! ஆமாம்..பிரிவின் ஊடலால் தான் வருத்தம்..

      நன்றி வெற்றிவேல்!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...