உடையது விளம்பேல்

தென்றலுக்கு அன்று எட்டாவது பிறந்த நாள். அதனால் அன்று அம்மா அணிவித்துவிட்ட வளையலை உறங்கும் முன் கழற்றி வைத்து விட்டுப்  பாட்டியிடம் சென்றாள். பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்ட தென்றல், "அம்மா, என் தங்க வளையலைச் சன்னல் திண்டில் வைத்திருக்கிறேன், எடுத்துக்கோ" என்று சத்தமாகச் சொன்னாள். உடனே பாட்டி அவளிடம், "உன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பற்றி சத்தமாகச் சொல்லக் கூடாதுடா" என்று சொன்னார். ஏன் பாட்டி என்று கேட்டாள் தென்றல். அதற்கு பாட்டி சொன்ன கதை இதோ.

ஒரு நாள் கூட்டமாக இருந்த ஒரு பேருந்தில் ஒருவர் தன் மகனுடன் ஏறினார்.
இருவரும் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்தனர். சிறிது நேரம் கழித்து ஓர் இடம் கிடைத்த பொழுது அங்குச் சென்று அமர்ந்தான் அந்தச் சிறுவன். அவனிடம் பையைக் கொடுத்த அவன் அப்பா, "பை பத்திரம், அதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது" என்று சொன்னார். இது பேருந்தில் யாரிடமாவது திருடலாம் என்று ஏறி இருந்த ஒரு திருடனுக்கு கேட்டுவிட்டது. அந்தச் சிறுவன் அருகில் சென்ற அவன் கூட்டத்தில் சமயம் பார்த்துப் பையை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடி விட்டான்.

பாட்டி தென்றலிடம், "இதனால் தான் நம்மிடம் இருக்கும் பொருட்களைப் பற்றி சத்தமாகச் சொல்லக் கூடாது. அது நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் கேட்கும். சில சமயத்தில் நம்மைச் சிக்கலில் மாட்டி விடும். இதைத் தான் 'உடையது விளம்பேல்' என்று அவ்வைப் பாட்டியும் சொல்லியிருக்கிறாள்." என்று சொன்னார். புரிந்து கொண்ட தென்றல் சரி பாட்டி என்று சொன்னாள். நீங்களும் புரிந்து கொண்டீர்களா?

1 கருத்து:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...