பாரதிக்குப் புகழுரை

இன்று பெருமைக்குரிய பெரும் புலவன் பாரதிக்கு நினைவு நாள்
அவன் படைத்தது எத்தனைப் படைப்புகள்
விட்டுச் சென்றது எத்தனை நினைவுகள்
அவனுக்கு இருந்தது எத்தனை உயர்ந்த கனவுகள்
அவனுடைய சமூகச் சிந்தனை எத்தனை அருமை
அவனுக்கு இருந்த தொலை நோக்கு எத்தனை வியப்பு

பல கவிஞர் புகழும் பெருமையும் பெற்றுள்ளனர்
ஆனால் பாரதி போல பல பரிமாணங்களில் படைத்தவர் யார்?
இயற்கை சமூகம் பக்தி நாடு மக்கள் உயிர்கள் என்று
வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் ஆழமாகத் தொட்டவர் யார்?
புலவன் மட்டும் இல்லை சுதந்திர போராட்டத் தலைவனாய்
சமூக ஆர்வலனாய் பத்திரிகை ஆசிரியனாய்ப் பல பணிகள்
உள்ளப் பூர்வமாய் ஆற்றிய பாரதிக்குப்  புகழ்ப்பா எழுத விழைகிறேன்
அது அவ்வளவு எளிதானதல்ல என்று அறிந்தே!

ஓடி விளையாடு பாப்பா என்று அன்பாக அறிவுறுத்திய பாரதி
அச்சமில்லை அச்சமில்லை என்று தைரியம் கொடுத்த  பாரதி
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று சீறிய பாரதி
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று ஏங்கிய பாரதி
ஜெயப் பேரிகை முழங்கடா என்று வெற்றி முழக்கம் செய்த பாரதி
காக்கைக் குருவி என் சாதி என்று அனைத்து உயிரும் ஒன்றென்ற  பாரதி
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மனம் வெதும்பிய பாரதி
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு என்று காதலில் உருகிய பாரதி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்று தொலை நோக்கம் கொண்ட பாரதி
எத்தனை விதமான உணர்வுகள்
பரந்து விரிந்த எண்ணங்கள்!

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நன்னாடு
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு
என்றுப் பாடியதில் நாட்டுப் பற்றும்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதானது எங்கும் காணோம் என்பதில் மொழிப் பற்றும்
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்பதில் மழலை இன்பமும்
காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று பக்திப் பரவசமும் 
செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என்றதில் பெண் முன்னேற்றமும்
இடையின்றி அணுக்களெல்லாம் சுழலும் எனக் கேட்டோம் என்று அறிவியலும்
இப்படி பலவும் எளிதாகப் பாடிச் சென்று விட்டான்
இப்பூமியில் அவன் வாழ்ந்த முப்பத்தி ஒன்பது ஆண்டுகளில்
அவனைப் புகழ்ந்து ஒன்று பாட நான் திணறுகின்றேன்!

4 கருத்துகள்:

  1. உண்மையை அழகாகச் சொல்லி இருக்கீங்க கிரேஸ்... பாரதியின் பாடல்களை பட்டியலிட்ட விதம் மிக அருமை.. "பாரதி தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு".. பாரதியின் புகழ் என்றும் வாழும் !!

    பதிலளிநீக்கு
  2. நினைவு தின சிறப்புக் கட்டுரை அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...